India

பப்ஜியை தடை செய்துவிட்டு அதேபோல் கேமை கொண்டுவருவதா? : FAU-G சண்டை விளையாட்டால் பொதுமக்கள் அதிருப்தி!

அக்‌ஷய் குமார் FAU-G (Fearless And United - Guards) எனப்படும் மல்டிபிளேயர் சண்டை விளையாட்டை வெளியிடுவதாக அறிவித்திருப்பது பப்ஜி கேமின் ஆபத்துகள் குறித்து கவலைபட்டோருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சீன இராணுவங்களுக்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எல்லையில் உரசல் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பிலும் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். தொடர்ந்து இந்திய இராணுவத்துக்கு சீன இராணுவம் நெருக்கடி கொடுத்து வருவதால் சமீபத்தில் பப்ஜி உள்ளிட்ட 118 சீன மொபைல் ஆப்களை இந்திய அரசு தடை செய்தது.

சீனாவை இராணுவ ரீதியாகவும், ராஜாங்க ரீதியாகவும் எதிர்கொள்ள திராணியில்லாத மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு மொபைல் ஆப்களை தடை செய்வதில் என்ன பயன் என்ற விமர்சனங்களும் எழுந்த வண்ணம் இருந்தன.

ஆனால் அதே நேரத்தில் பல மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிமையாக இருந்த பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டது பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு ஆறுதல் தந்தது. அவர்கள் ஆசுவாசம் அடையும் இந்த நேரத்தில் அதேபோன்ற வேறொரு கேமை கொண்டு வர இருப்பதாக அக்‌ஷய் குமார் ஆதரவில் இயங்கும் ஒரு கேமிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த புதிய கேமுக்கு ஃபவுஜி (FauG) எனப் பெயரிடப்பட்டுள்ளது. என் கோர் கேம்ஸ் என்ற கேமிங் நிறுவனம் தயாரிக்கும் இந்த கேம் ஆப் பிரதமர் மோடி முன்னிறுத்தும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்தாலும், அது இந்திய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் ஊறு விளைவிக்கும் வண்ணம் அமைந்துவிடக்கூடாது என்பதே பலரின் கவலையாக உள்ளது.

Also Read: மீண்டும் வருகிறதா பப்ஜி? தடைக்கு பின் பப்ஜி நிர்வாகம் விளக்கம்