India

ராமர் கோவில் பெயரில் போலியாக நிதி திரட்டி மோசடி : உ.பி-யில் ஒருவர் கைது!

உத்தர பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் பெயரில் போலியாக அலுவலகம் திறந்து, பொதுமக்களிடம் அயோத்தி ராமர் கோயிலுக்காக எனச் சொல்லி நிதி பெற்று மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் போலியாக நிதி திரட்டும் மோசடி நடைபெற்று வருவது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நரேந்திர ராணா என்பவர் நேரில் சென்று வசூல் வேட்டை நடத்தியுள்ளார். விஷ்வ ஹிந்து பரிஷத் ராமர் கோயில் நிதி எனும் பெயரில் போலியான ரசீதும் அச்சடித்து பணம் செலுத்துவோருக்குக் கொடுத்து வந்துள்ளார்.

குறைந்தபட்சமாக நூறு ரூபாய் முதல் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை மக்களிடம் நரேந்திர ராணா வசூல் செய்து வந்துள்ளார். பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக விஷ்வ ஹிந்து பரிஷத் பெயரில் ஒரு போலியான அலுவலகத்தையும் மீரட்டில் ஏற்படுத்தி இருக்கிறார்.

வி.எச்.பி நிர்வாகிகள் சிலருக்கு கிடைத்த தகவலால், நேரில் சென்று ராணாவின் அலுவலகத்தில் விசாரித்துள்ளனர். இதையடுத்து, நரேந்திர ராணா மோசடி செய்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர ராணா மீது வழக்குப்பதிவு செய்துள்ள மீரட் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை பல ஆயிரங்களை ராணா மோசடி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: நூதனமான முறையில் வாடிக்கையாளர்களிடத்தில் பெட்ரோல் திருடிய பங்குகளுக்கு சீல் : தமிழகத்தில் இது சாத்தியமா ?