India

முன்னாள் குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ பிரணாப் முகர்ஜி காலமானார்!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்ற மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜி கோமா நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், பிரணாப் முகர்ஜி சற்று முன்னர் காலமானார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமான தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பகிருந்துள்ள அபிஜித் முகர்ஜி, “மருத்துவர்களின் கடுமையான முயற்சியையும் மீறி எனது தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் பிரார்த்தனை மேற்கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் அரசில் முக்கிய துறைகளின் அமைச்சராகப் பொறுப்புகளை வகித்தார்.

2012ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 13-வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார் பிரணாப் முகர்ஜி. 2019ம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு, முக்கியத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.