India

"ஒரே நாடு; அனைத்துப் பணிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு” - மோடி அரசின் அமைச்சரவை ஒப்புதல்!

மத்திய மாநில அரசுப் பணிகளுக்கும், வங்கி தேர்வுகளுக்கும் பொது நுழைத் தேர்வினை மத்திய அரசு அமல்படுத்துகிறது. இதற்கான ஒப்புதல் பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவேடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினர்.

ரயில்வே பணியாளர் தேர்வு, வங்கி பணியாளர் தேர்வு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆகியவற்றிற்கு முதல் கட்டமாக ஒரே நுழைவுத் தேர்வினை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் தேர்ச்சி பெறுகிறவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்குச் செல்லலாம். இந்த தேர்வு 12 மொழிகளில் நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை மூன்று ஆண்டுகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தி அடுத்த கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு, வங்கிப் பணிகளுக்கு தனித்தனியாக தேர்வு நடத்தும்போது பலமுறை தேர்வுக் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை மாணவர்கள் சந்திக்கின்றனர். ஒரே தேர்வு என்பதால், பணம், காலவிரயம் தவிர்க்கப்படும். எனவேதான் புதிய நடைமுறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் முறைகேடுகளும் தடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த தேர்வினை மாநில அரசுகளும் அரசுப் பணியாளர்கள் தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதற்காக தேசிய பணியாளர் தேர்வு முகமை டெல்லியை மையமாக கொண்டு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Also Read: விளை நிலங்களை அழித்து புதிதாக 23 தேசிய நெடுஞ்சாலைகள் கொண்டு வரும் மோடி அரசு: சுங்க கட்டணம் உயர வாய்ப்பு?