India

“நீட் கொடுமையால் கோவை மாணவி தற்கொலை” - கொலைவெறி அடங்காத பா.ஜ.க அரசு!

பா.ஜ.க அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு, தமிழகத்தில் பல மாணவர்களை காவு வாங்கி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

அனிதாவைத் தொடர்ந்து ரித்து, வைசியா ஆகியோரின் உயிரையும் நீட் குடித்தது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் ஒரு மாணவி நீட் தேர்வால் உயிரிழந்துள்ளார்.

கோவை ஆர்.எஸ் புரம் வெங்கடசாமி சாலை கிழக்குப் பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவரின் மகள் மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி மையத்தில் பயின்று வரும் சுபஸ்ரீ, நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் சூழலில் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரி பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், நீட் தேர்வை நடத்தியே தீருவது என பா.ஜ.க அரசு விடாப்பிடியாக இருந்து வருகிறது.

பா.ஜ.க அரசின் நீட் வெறியால் இன்னொரு மாணவியும் பலியாகியுள்ளது மாணவர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தி.மு.க எம்.பி., கனிமொழி, “நீட் தேர்வு அளிக்கும் மன அழுத்தம் தாங்காமல்,மேலும் ஒரு கோவை மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனா காரணமாக, இந்த ஆண்டாவது மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.

Also Read: “அ.தி.மு.க ஆட்சியில் போலிஸாருக்கும் பாதுகாப்பு இல்லை” - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சாடல்!