India

“நீட் தேர்வை ஒத்திவைக்கவோ, ஆன்லைன் மூலம் நடத்தவோ முடியாது” - மாணவர்கள் வாழ்வில் விளையாடும் மோடி அரசு!

நீட் நுழைவுத் தேர்வு ரத்து இல்லை. திட்டமிட்டபடி நடத்தப்படும். ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இயலாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

செப்.13 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த முடியுமா அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா என்று கேட்டு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதற்கு பதிலளித்துள்ள தேசிய தேர்வு முகமை, ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

மத்திய அரசு போதிய விமானங்களை இயக்கி வருவதால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்குத் தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் கொடுத்து அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதால் தேர்வை ஒத்திவைக்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Also Read: ‘நீட்’டால் மருத்துவக்கல்வி சிதைப்பு.. புதிய பாடத்திட்டத்தால் உயர் கல்வி பறிப்பு.. - வைகோ கடும் கண்டனம்!