India

‘மக்களின் எதிர்ப்பை முடக்க முடியாது’ : NEP, EIA வரைவுகளை தமிழில் மொழிபெயர்த்த தன்னார்வலர்கள்!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த முறை ஆட்சியின் போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் முன்மொழிந்து நிறைவேற்றி வருகிறது.

அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்கள நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளது.

அந்த புதிய கல்விக் கொள்கையில் ஏழை மாணவர்களின் கல்வி கனவினைத் தகர்க்கும் வகையிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பாடத்திட்டத்தின் வழியாகக் கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கப் பார்க்கிறது.

கொரோனா பேரிடரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தச் சூழலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத பா.ஜ.க அரசு, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சில அவசர சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.

அந்தவகையில் ஊரடங்கு காலத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 இல் சட்டம் திருத்தம் மேற்கொள்ள வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த வரைவு அறிக்கையை வெறும் இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்கலாம் எனக் கூறிவிட்டு, அந்த வரைவு அறிக்கையை இரண்டு மொழிகளில் மட்டுமே வெளியிட்டுவிட்டு பிராந்திய மொழிகளில் வெளியிடாமல் இருப்பது இந்திய மக்களின் கருத்து கேட்கும் உரிமையை தட்டிப் பறிக்கும் செயலாகும். அரசின் இத்தகைய மோசமான நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் மற்றும் சூழலியலாளர்கள் கண்டித்து வருகின்றனர்.

முன்னதாக புதிய கல்விக் கொள்கையின் வரவு அறிக்கை வெளியிடும்போதும் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே முதலில் வெளியிட்டது. அதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பின்னர் நீதிமன்றம் வரை சென்று பிராந்திய மொழிகளில் அறிக்கை பெறப்பட்டது.

அதற்கு முன்னதாக கருத்துக்கேட்பு கால அவகாசம் முடியவிருந்த நிலையில் தமிழகத்தில் சில கல்வியாளர்கள் புதிய கல்விக் கொள்ளையை மொழிபெயர்த்து மக்களை அறியச் செய்து அரசின் மறைமுக சதியை அம்பலப்படுத்தினார்கள். அதில் பெரும் பங்காற்றியவர் எழுத்தாளர் விழியன்.

அதைத் தொடர்ந்து தற்போது நந்தகுமார் மற்றும் ஜீவ கரிகாலன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்று EIA 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவை தமிழில் மக்கள் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் யாவரும் பதிப்பகம் வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசு உள்நோக்கத்தோடு பிராந்திய மொழிகளை புறக்கணித்து அறிக்கை விடும் அதே நேரத்தில் மாநில நலன் காக்கும் நோக்கிலும், மக்களிடையே உண்மையைக் கொண்டு செல்லும் நோக்கிலும் மொழிபெயர்ப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: EIA 2020 வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட முடியாதா? - மத்திய மோடி அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் ஆணை!