India

“இறுதியாண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்” - உச்சநீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் நிலையில், பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை யு.ஜி.சி வெளியிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்தனர். யு.ஜி.சி வழிகாட்டுதல்கள் தன்னிச்சையாக இருப்பதாகவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில் தேர்வு நடத்துவது ஆபத்தானது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யும்படி யு.ஜி.சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்றத்தில், யு.ஜி.சி சார்பில் இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை என்றும், அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 2020 இறுதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலத்திற்கு சரிசெய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பரில் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு வேறு ஒரு தேதியில் எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் யு.ஜி.சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி அரசுகள் தேர்வுகளை ரத்துசெய்தது வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிரானது என்றும் யு.ஜி.சி கூறியுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Also Read: “கடந்த செமஸ்டர் மதிப்பெண்களை கணக்கிட்டு கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பெண்” - யு.ஜி.சி வழிகாட்டல்!