India

“பிரதமரின் 56 இன்ச் மார்பு 26 இன்ச் ஆகக் குறைந்து விட்டது” : மோடியை கடுமையாக சாடிய காங்கிரஸ் எம்.பி!

இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு நாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். சீன தரப்பிலும் 30க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் அதுதொடர்பாக சீனா இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிட வில்லை.

கடந்த 45 ஆண்டுகளுக்கு பிறகு இருநாட்டு ராணுவம் இடையே மோதிக்கொண்டு உயிர்பலியை ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த பிரச்சனை தீர்க்க இரு நாடுகளுக்கு இடையே முயற்சிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

இதனையடுத்து பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியின் கருத்துத் தொடர்பாக பல்வேறு விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்ததை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான அகிலேஷ் பிரசாத் சிங் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அகிலேஷ் பிரசாத் சிங் அளித்த பேட்டியில், “ராகுல் காந்தி கூறிய கருத்தில் தவறும் எதுவும் இல்லை. முன்பு நாம் நமது ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 பேரை சுடுவோம் என்று கூறினோம். ஆனால் தற்போது 20 ராணுவ வீரர்கள் சீனாவுடன் நடந்த மோதலில் பலியாகி உயிர்தியாகம் செய்துள்ளனர்.

நமது பிரதமரின் 56 இன்ச் மார்பு 26 இன்ச் ஆக குறைந்துள்ளது. நாம் தயார், தயார் என்று பிரதமர் ஒருபுறம் கூறுகிறார், ஆனால் சீனா நம் ஒட்டுமொத்த நாட்டையுமே காயப்படுத்தியுள்ளது. அரசு ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஊரடங்கில் ரயில்வேதுறையை முடக்கி, தனியார் கைகளில் கொடுக்க மோடி அரசு திட்டம்” : வைகோ குற்றச்சாட்டு!