India

வீட்டு உபயோக மின் கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை ஆலோசனை.. ஏழைகளின் வயிற்றில் அடிக்க மோடி அரசு புது திட்டம்!

நாடு முழுவதும் மின் விநியோகத்தையும், கட்டணம் வசூலிப்பதையும் மாநில அரசுகளிடமிருந்து பறித்து தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மின்வாரிய தொழிலாளர்களும், விவசாயிகளும் பல வகையில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

ஆனால், மசோதாவை நிறைவேற்ற மோடி அரசின் அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் மழைக்கால கூட்டத் தொடரில் புதிய மின்சார திட்ட மசோதாவை தாக்கல் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே வோல்டேஜ் அடிப்படியில் மின் கட்டணத்தை நிர்ணயிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை வழங்கியுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வீட்டு உபயோக மின் கட்டணம் குறைவாகவும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது.

இந்த வித்தியாசத்தைக் குறைக்க வீட்டு உபயோக மின் கட்டணத்தை உயர்த்தும் வகையில் கொள்கை முடிவுகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேலும், மின் விநியோகம் 50 முதல் 60 பிரிவுகளாக தற்போது இருப்பதை 6 பிரிவுகளாகக் குறைக்கவும் இந்த குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் வணிகம் சார்ந்த பயன்பாட்டினை கண்டறிந்து கட்டணம் வசூலிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

வீடுகள் மற்றும் விவசாயிகளுக்கான மின்சார மானியத்தை நேரடியாக வங்கிகளில் செலுத்துவது உள்ளிட்ட பல கொள்கை முடிவுகளுக்கு அடுத்த வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: புதிய மின்சார திருத்தச் சட்டம் : பா.ஜ.க.,வை அன்றே எதிர்த்த தி.மு.க - இப்போது கெஞ்சும் அ.தி.மு.க!