India

“நான்காம் கட்ட ஊரடங்கு - தளர்வுகளோடு புதிய விதிமுறைகள்” : இன்று மாலை வருகிறது அறிவிப்பு !

இந்தியாவில் பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 4000 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கை மே 31 வரை நீடிக்க மத்திய அரசு முடிவு என்று தகவல் வெளியாகியுள்ளது. புதிய விதிமுறைகளை மத்திய அரசு இன்று அறிவிக்கவுள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு எந்த விலக்கும் இல்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த ஆறு மாவட்டங்களும் டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, போபால் உள்ளிட்ட 30 மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே 80% கொரோனா பாதிப்பு உள்ளது. இவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரடங்கை பெருமளவுக்கு விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தொழிற்சாலைகளை அனுமதி பெற்று இயக்கலாம். அதுபோல் சிகப்பு பகுதி தவிர்த்து மற்ற இடங்களில் குறைந்த அளவிலான பயணிகளுடன் பேரூந்து, ஆட்டோ இயங்க அனுமதி வழங்கப்படவுள்ளது.

மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் ஒருநாள் விட்டு ஒருநாள் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். சிவப்பு மண்டலம் தவிற மற்ற இடங்களில் 50% இயல்பு நிலை தொடங்கும் நிலையில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும். விமானப் போக்குவரத்து ஜூன் மாதம் மட்டுமே தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பெரிய வணிக மையங்கள் உள்ளிட்ட அதிக மக்கள் நடமாட்டம் உள்ள நிறுவனங்கள் அனைத்தையுமே மே 31 ஆம் தேதிவரை திறக்க அனுமதி இல்லை என்றே தெரிகிறது.