India

பசிக் கொடுமை : சுட்டெரிக்கும் வெயிலில் 310 கி.மீ தூரம் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளி பரிதாப பலி!

தெலுங்கானாவின் பத்ராச்சலம் அருகே சொந்த ஊருக்கு செல்ல 310 கி.மீ தூரம் பயணம் மேற்கொண்ட 21 வயது புலம்பெயர்ந்த தொழிலாளர், கடும் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஒடிசாவின் மல்கங்கிரியை சேர்ந்த 21 வயதாகும் தொழிலாளர், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சொந்த ஊருக்கு நடந்து செல்ல தீர்மானித்துள்ளார்.

ஞாயிறன்று ஐதராபாத்தில் இருந்து கிளம்பிய நான்கு பேரும் கால்நடையாக 310 கி.மீ தொலைவில் உள்ள பத்ராச்சலம் சென்றடைந்தனர். அப்போது நெஞ்சு வலிப்பதாக கூறிய அந்தத் தொழிலாளர் வாந்தி எடுத்து நிலைகுலைந்து சாலையில் விழுந்துள்ளார்.

உடன் வந்த நண்பர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு தொழிலாளர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதீத வெயில் தாங்காமல், தோல் மற்றும் உதடுகள் வறண்டு தொழி லாளர் இறந்திருக்கலாமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திங்கள் பிற்பகலில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை என உடன் வந்த நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு தகவல் அளித்த அதிகாரிகள், தொழிலாளியின் உடலை வாகனம் மூலம் மல்கங்கிரிக்கு அனுப்பி வைத்தனர்.