India

“ஊரடங்கு : முடிவெடுக்கும் அதிகாரத்தை பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால் நிலை மோசமாகும்” - ராகுல் எச்சரிக்கை!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், பா.ஜ.க அரசு கொரோனா தடுப்புப் பணிகளிலும், நிவாரண உதவிகள் வழங்குவதிலும் பின்தங்கி இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கொரோனா வைரஸ் தொற்று முதியோருக்கும், நோயாளிகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. மக்கள் மனதில் உளவியல் ரீதியான மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியம். மத்திய அரசு ஊரடங்கைத் தளர்த்த விரும்பினால், மக்களிடம் உள்ள அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா ஊரடங்கு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவில் பிரித்து வழங்கினால்தான் கொரோனாவை வெல்ல முடியும். இன்னும் அதிகாரத்தை பிரதமர் அலுவலகமே வைத்திருந்தால், கொரோனாவுக்கு எதிரான போரில் தோற்றுவிடுவோம்.

பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடளுடனும், மாவட்ட ஆட்சியர்களுடனும் ஊரடங்கு குறித்துப் பேச வேண்டும். முதலாளி மனப்பான்மையில் அல்லாமல், ஒரு சக ஊழியரைப் போல் பிரதமர் மோடி பேச வேண்டும்.

இப்போதுள்ள நிலையில் பச்சை, சிவப்பு மண்டலங்களை மத்திய அரசு முடிவு செய்கிறது. இவற்றை மாநில அரசுகளின் வசம் விட்டுவிடுங்கள். மாநில அரசுகளுக்குப் போதுமான நிதியை வழங்குவது அவசியமானது.

குடும்பங்களுக்கு ரூ.7,500 நிவாரண நிதி வழங்குதல், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிகள் போன்றவற்றை போன்றவற்றைச் செய்து, ஊரடங்கைத் தளர்த்த வேண்டும்.

ஊரடங்கைத் தளர்த்தும் நெறிமுறைகளில் மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும். இது விமர்சிப்பதற்கான நேரம் அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். இப்போதுள்ள இக்கட்டான சூழலிலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்பதே முக்கியம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “ஆமாம் சாமி” போட்டு நழுவிவிடக் கூடாது- புதிய மின்சார திருத்தச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்