India

கொரோனா தடுப்பு நடவடிக்கை : மக்களுக்கு உதவ கால் சென்டரில் சேர்ந்த நடிகை நிகிலா விமல்! #Covid19

இந்தியாவில் முதல் முதலில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலம் கேரளம்தான். ஆனால், கடந்த 2 மாதங்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்தாலும், கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட சீரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் அங்கு பெரும்பாலும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னார்வலர்களை அரசுடன் ஒன்றிணைத்து சரியான முறையில் பாதுகாப்போடும், பொதுநலனோடும் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது கேரள அரசு. இதுவரையில் கேரளாவில் 375 பேர் கொரோனா பாதிக்கப்பட்டிருந்ததில் 179 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இருப்பினும், மேலும் வைரஸ் தொற்று பரவிடாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள மாநில அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணிபுரிய கேரளாவின் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து சார்பில் கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வேலை பார்ப்பதற்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனையறிந்த, பிரபல நடிகை நிகிலா விமல், தாமாக முன்வந்து கால் சென்டர் பணியில் சேர்ந்துள்ளார். கடந்த ஏப்ரல் 11ம் தேதியில் இருந்து நிகிலா அங்கு பணிபுரிந்து வருகிறார். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்காக உதவ எனது பங்கும் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என நிகிலா கூறியுள்ளார். தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல், கிடாரி படங்களிலும், கார்த்தியுடன் தம்பி படத்திலும் நடித்திருந்தார் நிகிலா.

மேலும், அந்த கால் சென்டரில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அஜித் மத்தூல், மாநில விளையாட்டு கவுன்சில் துணைத் தலைவர் வினீஷ், கால்பந்தாட்ட வீரர் வினீத் உள்ளிட்ட பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களது தன்னார்வத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், பாராட்டையும் கிடைத்து வருகிறது.

Also Read: “சூப்பர்ஹீரோ பினராயி” கொரோனாவை வீழ்த்தும் கேரளா: எப்படி நிகழந்தது அதிசயம்?- பாராட்டும் வாஷிங்டன் போஸ்ட்!