India

“தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் வீடியோ மூலம் அஞ்சலி செலுத்திய போலிஸ் அதிகாரி” - நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2069-லிருந்து 2,301-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53-லிருந்து 56-ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. மேலும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பலரும் தங்களின் பணிகளை தீவிரமாகச் செய்து வருகின்றனர். இதனிடையே ஆந்திராவில் ஒரு போலிஸ் அதிகாரி தனது தாயாரின் இறுதிச் சடங்கிற்குச் செல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடாவில் காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சாந்தாராம். ஊடங்கு உத்தரவால் தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருந்த சாந்தாராமின் தாயார் இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் செய்தியை அறிந்த காவல்துறை உயரதிகாரிகள் சாந்தாராமுக்கு விடுமுறை அளித்துள்ளனர். நாடு முழுவதும் இப்படி இக்கட்டான சூழல் உள்ளபோது நான் பணியில் இருப்பதே சரியானது எனத் தெரிவித்து விடுமுறையை மறுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த நேரத்தில் நான் எனது பணியில் தொடர்வதன் மூலமாகவே எனது தாயாரின் ஆத்மா சாந்தி அடையும். இறுதிச் சடங்கை எனது சகோதரரைச் செய்யும் படி கூறினேன். அதன்படி இறுதிச்சடங்கு நிகழ்வை செல்போன் மூலம் வீடியோவில் பார்த்து எனது தாயாருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

நாங்கள் இத்தகைய கஷ்டங்களை அனுபவிக்க காரணம் பொதுமக்கள் மீது உள்ள அக்கறையே, பொதுமக்களும் அவரவர் வீடுகளிலேயே வரும் 2 வாரங்கள் இருந்து ஊரடங்கை வெற்றி பெறச் செய்தால் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “தாய் இறந்த செய்தி தெரிந்தும் கொரோனா தடுப்புப் பணியை செய்த சுகாதாரத்துறை அதிகாரி” : நெகிழ்ச்சி சம்பவம்!