India

Corona Alert : கொரோனா அச்சத்தைப் பயன்படுத்தி போலி கிருமி நாசினி பாட்டில்கள் தயாரிப்பு - இருவர் கைது!

கொரோனா வைரஸ் அச்சத்தைப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான போலி கிருமி நாசினி திரவங்களை கர்நாடகா காவல்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்காக பொதுமக்கள் முகக்கவசம் அணியும்படியும், கைகளை கிருமி நாசினி மூலமாக (Sanitizers) சுத்தம் செய்யும்படியும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முகக் கவசங்களுக்கும், கிருமி நாசினிகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைச் சாதகமாக பயன்படுத்தி முகக் கவசங்களையும், கிருமி நாசினிகளையும் அதிக விலைக்கு விற்பது அரங்கேறி வருகிறது.

இதற்கு ஒருபடி மேலே சென்று போலி கிருமி நாசினிகளைத் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலின் புழக்கம் அதிகரித்துள்ளது.

ரகசிய தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் வி.வி.புரம், சாம்ராஜ் பேட்டை ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு இரண்டு குடோன்களில் 8 ஆயிரத்து 500 போலி சானிடைசர்கள், ஆல்கஹால் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் 56 லட்ச ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இதனையடுத்து ராஜூ, சந்தன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் மருந்துக் கடைகளில் டெட்டால் போன்ற கிருமி நாசினிகளை வைத்துக்கொண்டே விற்பனை செய்வதில்லை என்றும், இதுபோன்ற போலி திரவங்களை விற்பனை செய்வதும் தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களும் அவற்றை வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

மக்களின் அச்சத்தைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு காசு பார்க்கும் கும்பல்கள் குறித்து தொடர்ந்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “கொரோனா இருந்தாலும் வரிகளை ஆன்லைனில் செலுத்தலாமே?” : உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு இரக்கமின்றி வாதம்!