India

“உளவுத்துறை முன்பே எச்சரித்தும் கண்டுகொள்ளாத டெல்லி போலிஸ்” - டெல்லி வன்முறையைத் திட்டமிட்டது யார்?

டெல்லியில் கலவரம் வெடிப்பது குறித்து உளவுத்துறை பல முறை எச்சரிக்கை விடுத்தும், அமித்ஷாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறை அவற்றைப் பொருட்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாகக் கூறி வன்முறையில் இறங்கியது இந்துத்வா கும்பல்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறை முப்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கி இருக்கிறது. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் கடைகளுக்கும், வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது நடந்த இந்த தொடர் வன்முறைச் சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

வன்முறையைத் தூண்டும் விதமாக கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பேசிய நிலையில், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

நாட்டின் தலைநகரில் உருவான பதற்றச் சூழ்நிலை குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் மெத்தனமாக நடந்துகொண்டது ஏன்?

உளவுத்துறை செயல்பாட்டுக் குறைபாடு காரணமாகவே வன்முறை கைமீறிப் போய்விட்டதாக ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலர் சொல்கிறார்கள்.

ஆனால், சிறப்பு புலனாய்வுப் பிரிவு, உளவுத்துறை இரண்டும் தொடர்ந்து 6 முறை டெல்லி போலிருக்கு கலவரம் வெடிப்பது குறித்து எச்சரிக்கை விடுத்தும், அமித்ஷாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் டெல்லி காவல்துறை அவற்றைப் பொருட்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறை தொடங்கிய ஞாயிற்றுக்கிழமையன்று பகலில் பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ரா தனது ட்விட்டர் பதிவில், மாஜ்பூரில் 3 மணிக்கு கூடுமாறு தெரிவித்திருந்தார். இதுகுறித்து முதல் எச்சரிக்கையை உளவுத்துறை அனுப்பியுள்ளது.

இதையடுத்து பல இடங்களில் கும்பல், கும்பலாக ஆட்கள் கூடி இருப்பதையும், கற்கள் வீசி வருவது குறித்தும் எச்சரிக்கை அனுப்பபட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கைகளை பா.ஜ.க அரசும், டெல்லி போலிஸாரும் திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர் மீது இந்துத்வா கும்பல் தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தையே டெல்லி காவல்துறை செயல்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

Also Read: "பால் வாங்க கடைவீதிக்கு வந்தவர் சுட்டுக்கொலை” - கொல்லப்பட்டவர்களில் 19 பேர் பட்டியலை வெளியிட்ட The Wire !