India

’மோடி.. அறிவாளி.. புத்திசாலி’ : பிரதமரைப் புகழ்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி - நீதித்துறைக்கு களங்கமா ?

டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் சர்வதேச நீதித்துறை மாநாடு பிப்ரவரி 22,23 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில் பிரதமர் மோடி, சட்டத்துறை அமைச்சர் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே மற்றும் உச்சநீதிமன்ற நிதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, ’மோடி சர்வதேச அளவில் தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பன்முகத்திறன் கொண்ட அறிவாளி’ என்றெல்லாம் தனது மேடைப்பேச்சில் புகழ்ந்து தள்ளினார்.

தற்போது, அவரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மட்டுமில்லாது ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படையாக தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, அருண் மிஸ்ராவின் இந்தக் கருத்து இந்தாண்டின் மிகச் சிறந்த காமெடி என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சாவந்த் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ’தேசத்தின் மிக முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் பிரதமரை புகழ்ந்து பேசுவது தேவையற்றது. இதுபோல செயல்களால் நீதித் துறைக்கு களங்கம் ஏற்படும். நீதித்துறையின் சுதந்திரத்தை பாதிக்கும்’ எனவும் தெரிவித்து வருகின்றனர்.

நீதித்துறையின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், நாட்டின் அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு பணியாற்ற வேண்டும் எனும் முக்கியமான விதி இருக்கையில், நீதிபதி மிஸ்ரா இவ்வாறு பேசி இருப்பது நீதித்துறைக்கு பெரும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “குழந்தைகள் வாழமுடியாத மோசமான நாடாக மாறிய இந்தியா”: மோடி ஆட்சியின் சாதனை இதுதானா? - அதிர்ச்சி தகவல்!