India

ரூ.1,000 கோடிக்காக இரும்பு ஆணைய பங்குகளை விற்கத் துணியும் பா.ஜ.க அரசு!

இந்தியாவின் பொருளாதாரம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் நாட்டின் வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் கீழே சென்றுவிட்டது. இதற்கு மோடி அரசு, மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கைகளான ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம் ஆகிய நடவடிக்கைகளே காரணம் என தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இப்படி இருக்கையில், நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தீர்வைக் காணாமல் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதையே முழுமூச்சாக செய்துவருகிறது பா.ஜ.க அரசு.

கூடுதல் தகவல் என்னவெனில், ரூ.65 ஆயிரம் கோடிக்கு இலக்கு நிர்ணயித்து அரசு நிறுவனங்களை தனியாருக்கு மோடி அரசு விற்று வருகிறது. இதுவரையில் தனியார் மயமாக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் மூலம் ரூ.34 ஆயிரம் கோடி கிடைக்கப்பெற்றுள்ளது.

வருகிற மார்ச் மாதம் முடிவடைவதற்குள் 31 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டும் வேலைகளில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இரும்பு ஆணையமான செயில் நிறுவனத்தின் 5 சதவிகித பங்கை Offer on sale எனும் முறையில் தனியாருக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பதாக முடிவெடுத்துள்ளது.

இதற்காக சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்க்க விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதில், ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அங்கு விளம்பரங்கள் செய்வதை நிறுத்தியுள்ளது. முன்னதாக, 2020-21 நிதியாண்டு முடிவதற்குள் அரசுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.20 லட்சம் கோடியைத் திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.