India

“இணைய தடையால், வேலையில்லாமல் கட்டிட வேலைக்குச் செல்லும் பத்திரிகையாளர்கள்” : காஷ்மீரின் அவலநிலை!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 370வது சட்டப் பிரிவை நீக்கம் செய்து, ஜம்மு-காஷ்மீரை பிளவுபடுத்தியதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுமையான கட்டுப்பாடுகளை அப்பகுதி மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில், காஷ்மீரில் இன்னும் பல இடங்களில் இயல்புநிலை திரும்பவில்லை.

மேலும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

உண்மையைப் படம்பிடிக்க ஊடகங்களுக்கு பல்வேறு இடங்களில் அனுமதி மறுக்கப்படும் நிலை என காஷ்மீர் தொடர்ந்து பதட்ட வளையத்திற்குள்ளேயே இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட இன்டர்நெட் சேவையால் உள்ளூர் செய்தியாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருவதாக பிபிசி செய்தி நிறுவனம் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது.

உள்ளூர் செய்தியாளர்களின் தற்போதைய நிலை பற்றி அந்தக் கட்டுரை விவரிக்கிறது. காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இடம்பெயரவும் முடியாமல், வேலையும் இல்லாமல் கடும் நெருக்கடியைச் சந்திக்கின்றனர். ஓரளவாவது குடும்ப வறுமையைப் போக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பணியை இழந்த பத்திரிகையாளர்கள் கிடைத்த வேலைக்குச் சென்று வருகின்றனர்.

அப்படி உள்ளூர் பத்திரிகையாளர்கள் கட்டிட வேலையிலும், பால் பண்ணை வேலையிலும் இறங்கியுள்ளனர். பலரும் பொருளாதார சூழலை சமாளிக்க முடியாமல் தவித்து, என்ன செய்வது என்றே தெரியாமல் முடங்கியுள்ளனர். இன்னும் சில பத்திரிகையாளர்கள் சேகரித்த செய்திகளை இணைய சேவையின்றி நிறுவனத்திற்கு கொண்டு சேர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

Also Read: "காஷ்மீர் முன்னாள் முதல்வர்களை கைது செய்வது பா.ஜ.கவின் பச்சை சுயநலமே!" - மு.க.ஸ்டாலின் கண்டனம்!