India

இன்றோடு வீட்டுக்குக் கிளம்பும் 92,000 BSNL, MTNL ஊழியர்கள் : ஜியோவிற்காக மோடி அரசு தீட்டிய திட்டமா?

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல், பா.ஜ.க ஆட்சியில் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு ரூபாய் 14,300 கோடி இழப்பு ஏற்ட்டுள்ளது.

இந்நிலையில், பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் நீண்டகாலப் போராட்டத்துக்கு பிறகு, 4ஜி சேவை வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதற்கிடையே, வருவாயில் பெரும்பகுதி சம்பளத்துக்கே செல்வதால், நிதிச் சுமையை குறைக்கும் வகையில் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஊழியர்களுக்கு வி.ஆர்.எஸ் திட்டத்தை மோடி அரசு கொண்டுவந்தது.

அதன்படி, ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படாமல் தாமதமாக வழங்கப்பட்டுவந்ததால் இந்த நிறுவனங்களின் எதிர்காலம் பற்றிய அச்சத்தின் காரணமாக அதிகமான ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தனர்.

அதன்படி, தற்போது வரை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் 1.76 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள். இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சுமார் 78,569 பேரும் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 14,378 பேரும் ஓய்வுக்கான விருப்பத்தைத் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமையுடன் (இன்று) பணியிலிருந்து ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் பி.எஸ்.என்.எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சங்க நிர்வாகி செல்லப்பா கூறுகையில், “இந்தத் திட்டம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் சதித் திட்டம். ஊழியர்கள் குறைப்பால், இனி பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தை தனியாரிடம் தாராளமாக விற்கமுடியும்.

Also Read: பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்குச் சொந்தமான நிலங்களை விற்பதில் மோசடி - ஊழியர்கள் குற்றச்சாட்டு

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்குப் பிறகு புதிய ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள். அதுமட்டுமின்றி, மீதமுள்ள ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கும். அந்த ஊழியர் செய்யவேண்டிய வேலைகளை ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனத்திற்கு அளித்துவிடுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.