India

CAA சட்டத்துக்கு எதிர்ப்பு : கேரள சட்டசபையில் சர்ச்சையைக் கிளப்பிய ஆளுநர் பேச்சு

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, கேரள சட்டப்பேரவையில் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் கேரள அரசு புகார் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4 மாநிலங்கள் இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என சட்டம் இயற்றியுள்ளன.

இந்நிலையில், கேரள சட்டமன்ற கூட்டம் இன்று கூடியது. அப்போது பேசிய கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமதுகான், ’சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மாநில அரசு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பான வாசகத்தைப் படிக்கமாட்டேன்’ என குறிப்பிட்டார். அதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு அமளி ஏற்பட்டது. இதனையடுத்து பேசிய ஆளுநர், “குடியுரிமை தொடர்பான பத்தியை நான் படிக்கிறேன். ஏனென்றால் நான் இதைப் படிக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார். அதே சமயத்தில் இது கொள்கை மற்றும் திட்டத்தின் கீழ் வராது என்ற கருத்தையும் நான் கொண்டிருக்கிறேன்.

இது அரசாங்கத்தின் பார்வை என்று முதலமைச்சரே சொன்னார். நான் உடன்படவில்லை, ஆனால் அவரது விருப்பத்திற்கு மதிப்பளிக்கவே இதனைப் படிக்கிறேன்” என்று குறிப்பிட்டார். இதனால் கேரள சட்டசபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

Also Read: “#CAAவுக்கு ஆதரவாக செயல்படும் ஆளுநரை நுழையவிடமாட்டோம்” : கேரள எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் போராட்டம்!