India

106 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வருகிறார் ப.சிதம்பரம் - ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 106 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் திகார் சிறையிலிருந்து ஜாமினில் விடுதலையாகிறார்.

கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ப.சிதம்பரம். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜாமின் வழங்கினர்.

ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் ப.சிதம்பரத்தால் வெளியே வர முடியவில்லை. இவரது உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட காரணங்களை காட்டி ஜாமின் கோரப்பட்டது. ஆனாலும் ஜாமின் வழங்கமுடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து வந்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார் ப.சிதம்பரம். ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்துள்ள நிலையில், தற்போது அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் அவர் திகார் சிறையிலிருந்து விடுதலையாகிறார். 106 நாட்களுக்குப் பிறகு திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வர உள்ளார்.

ஜாமினில் செல்லும் ப.சிதம்பரம், வழக்குகள் தொடர்பாக பேட்டி தருவதோ, அறிக்கை விடவோ கூடாது என்றும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக்கூடாது என்றும் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் ஜாமின் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

விசாரணை அதிகாரிகள் அழைக்கும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும்; பிணைத் தொகையாக ரூ.2 லட்சம் பணம் செலுத்த வேண்டும்; இதே தொகையுடன் இருவரின் உத்தரவாதமும் அளிக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: ''ஜி.டி.பி இன்னும் மோசமான நிலைக்கு சரியும்'' - எச்சரிக்கும் ப.சிதம்பரம்!