India

ஃபட்னாவிஸ் பதவியேற்பு நாடகம் இதற்காகதானா? - காங்கிரஸ் விளாசல்!

மகாராஷ்டிராவில் பெரும் அரசியல் குழப்பத்துக்கு இடையே, போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் அம்மாநில முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பொறுப்பேற்று பின்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க எம்.பி.அனந்தகுமார் ஹெக்டே, “சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய நிதி 40 ஆயிரம் கோடி ரூபாய் , தவறாகப் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால், ஃபட்னாவிஸ் பதவியேற்பு நாடகம் திட்டமிட்டே நடத்தப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார், பா.ஜ.கவின் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மகாராஷ்டிர நலனுக்கு எதிரான பா.ஜ.க முகம் அம்பலமாகியுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் கூட்டாட்சித் தத்துவம் நசுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள சுர்ஜிவாலா, “விவசாயிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கான 40 ஆயிரம் கோடி, கணக்கில் இருந்து எடுக்க சதி நடந்துள்ளதா என்று கேள்வி எழுவதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.