India

"ஒவ்வொரு 15 நிமிடத்திலும் ஒரு பெண்குழந்தை பாலியல் வன்கொடுமையை சந்திக்கிறது”- உளவியல் மைய இயக்குநர் தகவல்!

நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறது என்று கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையத்தின் இயக்குநர் டாக்டர் ரத்தின ரூபா ராபின்சன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி, உலகளவில் குழந்தைகள் மீதான வன்செயல் தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையம் சார்பில், குழந்தைகள் மீதான பாலியல் வன்செயலை தடுப்பது குறித்த ஒரு நாள் பயிலரங்கம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கில் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், சமூக சேவகர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண் குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது, போக்சோ சட்டம் கூறுவது என்ன என்பன போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து கன்னியாகுமரி அமைதி அறக்கட்டளை உளவியல் ஆலோசனை மையத்தின் இயக்குநர் டாக்டர் ரத்தன ரூபா ராபின்சன், வேல்டு விஷன் இந்தியா நிர்வாகி வக்கீல் ஜெயபால் ஆகியோர் கூறியதாவது :

நாட்டில் கடந்த 6 மாதங்களில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஜனவரி-ஜூன் வரையிலான 6 மாதங்களில், தேசிய குற்ற ஆவண புள்ளி விவரப்படி 24,212 வழக்குகள் பதிவாகி உள்ளன. மாதம் ஒன்றுக்கு 4,000 வழக்குகளும், நாளொன்றுக்கு 130 வழக்குகளும் பதிவாகி வருகின்றன.

15 நிமிடத்துக்கு ஒரு பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறது. பொதுமக்கள் மத்தியில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருந்தாலும், பெரும்பாலானோர் அது குறித்து வெளியே சொல்ல முன்வருவதில்லை” எனத் தெரிவித்தனர்.