India

‘ஏர் இந்தியாவை முழுவதும் தனியாருக்கு ஒப்படைக்க மோடி அரசு முடிவு’: அதிர்ச்சித் தகவல்!

மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா சமீப காலமாகக் கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது. அதே நேரம் இந்த இழப்பைக் காரணம் காட்டி, ஏர் இந்தியாவை ஒட்டு மொத்தமாக தனியாருக்கு ஒப்படைக்கும் முயற்சியையும் பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக நஷ்டத்தைக்காரணம் காட்டி ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாரிடம் கொடுக்க பாஜக அரசு முயற்சித்தது. அதன்படி, ஏர் இந்தியாவின் 76 சதவித பங்குகளை தனியாருக்கும் அளிக்கவும், 24 சதவித பங்குகளை தன் வசம் வைத்துக்கொள்ள திட்டமிட்டது. ஆனால் அரசின் இத்தகைய திட்டத்திற்கு எந்த பெரும் நிறுவனங்களும் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனையடுத்து பங்குகள் கூடவேண்டாம் விற்றால் போதும் என்ற மனநிலையில் அரசு வசம் இருக்கும் 100 சதவித பங்குகளையும் தனியாரிடமே கொடுத்துவிடுவது என்ற நிலைமைக்கு மோடி அரசாங்கம் சென்றுள்ளது. இதனால் ஏர் இந்தியா ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

கடந்த 1932-ல் தொடங்கப்பட்ட ஏர் இந்தியாவின் விமான சேவையை டாடா ஏர் சர்வீசஸ் என்ற பெயரில் ஜே.ஆர்.டி டாடா நடந்திவந்தார். சுதந்திரத்திற்கு பிறகு பொறுப்பேற்ற அரசாங்கம் ஏர் இந்தியாவை தன்வசமாக்கியது.

ஆனால், தற்போது அதேநிறுவனத்திற்கு ஏர் இந்தியாவை விற்க முடிவு எடுத்திருப்பதாகவும், ஏர் இந்தியா விற்பனைக்கு வருவதால் டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.