India
“இந்திய சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மைதான்”: ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப்- வெளியான அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் இஸ்ரேலிய என்.எஸ்.ஓ நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் பெகாசுஸ் என்ற மென்பொருள்கள் மூலம் இந்திய மக்களின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்ப்பததாக தெரிவித்துள்ளது. மேலும் வீடியோ கால் தொடர்பு மூலம் அந்த மென்பொருளை உளவு பார்ப்பவர்களின் செல்போன்களில் இறக்கிவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில், ஒருவேளை அந்த வீடியோ கால் அழைப்பை தொடர்புடைய நபர் ஏற்கவில்லை என்றாலும் அந்த மென்பொருள் செல்போனில் தங்கிவிடும் என்றும், அதன் மூலம் செல்போனில் உள்ள மற்ற தகவல்களை பெற முடியும் என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், குரல் பதிவு, முக்கிய தரவுகளுக்குப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட், வீடியோ கால் பதிவு, கேமரா பதிவு என அனைத்தையும் பெற்றுவிட முடியும் எனக் கூறுகின்றனர்.
இந்த பெகாசஸ் மென்பொருள் ஸ்கைப், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களுக்குள் புகுந்து உளவு பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனையடுத்து, தனது பயணர்கள் சுமார் 1,400 பேர் பெகாசஸ் மென்பொருள் மூலம் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் சட்டங்களை மீறியதாகவும், வாட்ஸ்அப் விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், பெகாசஸ் மென்பொருளை தயாரித்த இஸ்ரேலின் என்.எஸ்.ஒ நிறுவனம் இந்திய மதிப்பில் 53 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உளவு பார்ப்பதாக வெளியான தகவலை அடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் தனது பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க புதிய கட்டுப்பாடு அம்சங்களை உருவாக்கி இருப்பதாகவும் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த கண்காணிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களின் அடையாளங்களையும் வெளிப்படுத்த வாட்ஸ்அப் மறுத்துவிட்டது.
இதனையடுத்து இந்த புகார் குறித்த உரிய விளக்கத்தை நவம்பர் 4ம் தேதிக்குள் வாட்ஸ் அப் நிறுவனம் அளிக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், புகாருக்கு விளக்கம் அளித்துள்ள என்.எஸ்.ஓ. நிறுவனம், நாங்கள் தயாரித்த உளவு மென்பொருளை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.
Also Read
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன்: உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டு சென்னை இளைஞர் அசத்தல்!
-
உலகளவில் விளையாட்டுகளில் பதக்கங்கள்... அள்ளிக்குவித்த தமிழக வீராங்கனையருக்கு முதல்வர் ஊக்கத்தொகை!
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!