India

“ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்க மறுப்பது இதற்குத்தானா?” - நீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு வாதம்!

ஐஎன்எக்ஸ் மீடியோ முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவல் முடிந்த நிலையில், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து, ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. ப.சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜரானார்கள்.

மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் வாதிடுகையில், “ப.சிதம்பரம் மீதோ அல்லது அவர்களின் குடும்பத்தினர் இதற்கு முன் சாட்சியங்களைக் கலைத்ததாக எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை.

அவ்வாறு இருக்கும்போது தொடர்ந்து ப.சிதம்பரத்துக்கு ஜாமின் மறுக்கப்படுகிறது. சிபிஐ எவ்விதக் காரணமும் இன்றி, தொடர்ந்து சிறையிலேயே அடைத்துவைத்து அவமானப்படுத்த விரும்புகிறது. ஆதலால் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கவேண்டும் " என்று வாதிட்டனர்.

சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதம் நாளை நடக்கிறது என்பதால், நாளை வாதத்தைக் கேட்டபின் உச்சநீதிமன்றம் ஜாமின் மனுமீது உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. திகார் சிறையில் வைத்தே ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.