India

2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திய ரிசர்வ் வங்கி : காரணம் என்ன?

கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து முன்னர் புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

பின்னர் புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது சுமார் 14,400 கோடி அளவிற்கு பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆர்.பி.ஐ நடப்பு நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. அதில், “பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் கடந்த 2016 - 17 மற்றும் 2017 -18-ம் நிதியாண்டுகளில் 2,000 ரூபாய் அச்சிடப்பட்டதாகவும், ஆனால் 2019 - 2020ம் நிதியாண்டில் ஒரு நோட்டு கூட அச்சிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொருளாதார வல்லுநர் ஒருவர் கூறுகையில், “151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் 47 மில்லியன் அளவுக்கு குறைத்துள்ளது.

அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 11,692 மில்லியனாக உள்ளது. மேலும் திடீரென ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதை விட படிப்படியாக புழக்கத்தைக் குறைத்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது” என கருத்துத் தெரிவித்துள்ளார்.