India

சி.பி.ஐ வளையத்துக்குள் தஹில் ரமாணி? - எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி பதவியை ராஜினாமா செய்ததன் விளைவா?

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கடந்த மாதம் கொலீஜியம் உத்தரவிட்டது.

இதனை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்துக்கு தஹில் ரமாணி கோரிக்கை விடுத்திருந்தது நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார் ரமாணி.

பின்னர், கடந்த 21ம் தேதி தஹில் ரமாணியின் ராஜினாமா கடிதத்தை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரியை நியமித்து உத்தரவிட்டார் ஜனாதிபதி.

இந்நிலையில், மத்திய உளவுத்துறை தஹில் ரமாணிக்கு 5 பக்க அறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை புறநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.3 கோடியே 18 லட்சத்துக்கு 2 வீடுகளை வாங்கியுள்ளது தொடர்பாகவும், தலைமை நீதிபதி பொறுப்பு வகித்த போது சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வை தள்ளுபடி செய்தது குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி அளித்திருப்பதாக, பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொலீஜியத்தின் முடிவை ஏற்காமல் தஹில் ரமாணி ராஜினாமா செய்த சில நாட்களிலேயே, அவர் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, திட்டமிட்ட சதியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.