India

சென்னையில் பவாரியா கும்பல் கைவரிசை : 120 சவரன் நகைகளை கொள்ளையடித்தவர்கள் ம.பியில் கைது!

சென்னை நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள கிரானைட் தொழிலதிபர் ரமேஷ் (52) வீட்டில் கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது. ரமேஷ் சபரிமலை கோவிலுக்குச் சென்றிருந்த சமயத்தில் அவரது மனைவியும், பிள்ளைகளும் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு நேற்று முன்தினம், இரவு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது பூட்டப்பட்டிருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததால் வீடு திரும்பியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 120 சவரன் தங்க நகைகள், 4 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் என அனைத்தையும் மர்ம நபர்கள் வாரிச் சுருட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடனே பழவந்தாங்கல் போலிஸாருக்கு தகவல் கொடுத்ததும், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் போலிஸார் விரைந்தனர். வீட்டில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். பின்னர், வீட்டுக்கு வெளியேயும், அக்கம் க்கத்தில் இருந்த சிசிடிவி கேமிராக்களையும் சோதித்துப் பார்த்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மூவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நேற்று முன்தினம் பிற்பகலில் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்ததும், ரமேஷ் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்துகொண்டு சுவர் ஏறிக் குதித்ததும் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. ஆகையால் சிசிடிவி காட்சிகளை கொண்டு, வடமாநில கொள்ளையர்களை பிடிக்க 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

விசாரணையில், கொள்ளையடித்த நகை, பணத்துடன் பழவந்தாங்கலில் இருந்து ரயில் ஏறி எழும்பூர் சென்ற பின் அங்கிருந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு கொள்ளைக் கும்பல் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, மத்திய பிரதேச போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு நகுடா ரயில் நிலையத்தில் வைத்து கொள்ளையர்கள் 6 பேரை உஜ்ஜைன் போலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய பிரதேச போலிஸார் வசமுள்ள கொள்ளையர்களை அழைத்து வருவதற்காக தனிப்படையினர் அங்கு விரைந்தனர். மேலும், கொள்ளச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பிரபல பவாரியா கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.