India

தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமாணி ராஜினாமா கடிதம் ஏற்பு !

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டவர் விஜயா கே.தஹில் ரமாணி. இவரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த முடிவால் தஹில் ரமாணி அதிருப்தியடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தக் கோரிக்கையை கொலிஜியம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் தனது ராஜினாமா கடிதத்தை தஹில் ரமாணி அனுப்பினார்.

இந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளை மேற்கொள்ளமால் தஹில் ரமாணி இருந்துவந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்வது நியாயமற்றது என கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தஹில் ரமாணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். கடந்த 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் செயல்பட்டு வந்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி இனி தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.