India

நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான நிலத்தில் மனித எலும்புக் கூடு ; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகர் நாகர்ஜுனா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவர் சமீபத்தில் தெலங்கானாவில் பாப்பிரெட்டிகுடா என்ற பகுதியில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த நிலத்தில் விவசாயம் செய்வதற்கு நிலத்தின் தன்மைக்குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆய்வு செய்யச் சென்ற குழு நிலத்தில் துர்நாற்றம் அடிப்பதாக நாகர்ஜுனாவிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த அறையில் மனித எலும்பு கூட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலிஸார் எழும்புக்கூட்டைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், அங்கு சோதனையின் போது கிடைத்த ஆதார் கார்டை வைத்து விசாரணை மேற்கொண்டபோது அந்த நபர் பாப்பிரெட்டிகுடா பகுதியைச் சேர்ந்த சக்காலி பாண்டு என்ற 30 வயது இளைஞர். அவர் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய சகோதரரின் இறப்பு துக்கம் தாங்கமல் கவலையில் இருந்துள்ளார். அதனால் தான் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக பெற்றோர்க்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் அதன்பின்பு அவர் எங்கு போனார், என்ன ஆனார் என எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனாலும் போலிஸார் இதுதொடர்பாக வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.