India

“காவி உடையில் இருப்பவர்களால் பெண்களுக்கு ஆபத்து”- சின்மயானந்த் மீது திக்விஜய் சிங் மறைமுகத் தாக்கு!

பா.ஜ.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுவாமி சின்மயானந்த் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்வதாக சட்டக்கல்லூரி மாணவி வீடியோ மூலம் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சுவாமி சின்மயானந்த் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தால் பாஜகவினர் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் சின்மயானந்துக்கு எதிராக அரசியல் கட்சியினர், பெண்கள் அமைப்பினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், காவி உடை அணிந்தவர்கள், கோயில்களுக்கு உள்ளேயே பாலியல் வல்லுறவுச் செயல்களை அரங்கேற்றுவதாகவும், இதனால் இந்து மதத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் மறைமுகமாக சாடியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் ஆன்மீகத் துறை சார்ப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய அவர், “முன்பெல்லாம் ஒரு நபர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்ததும் துறவியாக மாறி ஆன்மிகப் பாதைக்கு திரும்புவார். ஆனால் இப்போது காவி அங்கி அணிந்து கொண்டு போலி மருந்துகளை விற்கிறார்கள்” என்றார்.

மேலும், காவி உடையில் இருப்பவர்களே பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் நிகழ்வில் ஈடுபடுகின்றனர். பாலியல் வன்கொடுமைகள் கோயில்களிலேயே நடைபெறுகின்றன. இந்து தர்மத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் இவர்களை கடவுள் கூட மன்னிக்க மாட்டார். காவி உடையில் இருப்பவர்களலேயே பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்று திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.