India

அயோத்தி வழக்கில் அக்டோபர் 18ம் தேதிக்குள் வாதங்களை நிறைவு செய்ய நீதிபதி வேண்டுகோள்: நவம்பரில் தீர்ப்பு?

சர்ச்சைக்குரிய பாபர் மசூதி - ராமர் ஜென்ம பூமி தொடர்புடைய 2.77 ஏக்கர் அயோத்தி நிலம் குறித்த வழக்கு நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய வழக்காக இருக்கிறது.

அயோத்தி வழக்கின் விசாரணை இன்று 26வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று விசாரணை தொடங்கியபோது அக்டோபர் 18ம் தேதிக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

கடந்த மே மாதம் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழுவானது ஜூலை மாதம் வரை பேச்சுவார்த்தையை நடத்தியது. அதில் முன்னேற்றம் இல்லை என்பதால் வழக்கை உச்சநீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு வழக்கை தினந்தோறும் விசாரித்து வருகிறது.

இதனிடையே, பேச்சுவார்த்தையை தொடரவேண்டும் என்று 2 மனுதாரர்கள் கேட்டுக் கொண்டதால் பேச்சுவார்த்தையை. தொடரமுடியுமா என்று கேட்டு அதன் தலைவர் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, மனுதார்கள் விரும்பினால் பேச்சுவார்த்தையை ஒருபக்கம் நடத்தலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். வழக்கு விசாரணை அதனால் பாதிக்கப்படாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வரும் நவம்பர் 17ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னதாக விசாரணையை முடித்து தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.