India

பழங்குடி சமூகத்தின் முதல் பெண் விமானி : சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

ஒடிசா மாநிலம் மலகன்கிர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுபிரியா மதுமிதா லக்ரா. 27 வயதான அனுபிரியா பழங்குடியின சமூகத்திலிருந்து முதல் பெண் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை ஒடிசா மாநில காவல்துறையில் போலிஸ் அதிகாரியாக உள்ளார்.

சிறுவயதில் இருந்தே விமானியாகி வானத்தில் பறக்கவேண்டும் என்ற ஆசையில் அதற்காகப் படித்துள்ளார். அதன்படி, மத்திய அரசின் விமான பயிற்சி மையத்தில் சேர்ந்து விமான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பலரின்உதவியால் படித்துள்ளார் அனுபிரியா.

இந்நிலையில் நடைபெற்ற பயிற்சி மற்றும் தேர்வில் வெற்றிபெற்றதையொட்டி, அனுபிரியா இந்த மாதம் முதல் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுபிரியா மதுமிதா லக்ரா

இதன் மூலம் இந்தியாவில் முதன்முதலாக விமானத்தை இயக்கும் பழங்குடியினப் பெண் என்ற பெருமையை அனுபிரியா மதுமிதா லக்ரா பெற்றுள்ளார்.

அனுபிரியாவின் முயற்சிக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவரது சாதனை அளவற்ற மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மற்ற பெண்களுக்கு அவர் ஒரு சிறந்த உதாரணமாகச் செயல்படுவார் என்றும் கூறியுள்ளார்.

ஏழ்மை நிலையைக் கடந்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இத்தகைய கனவை எட்டியுள்ள அனுபிரியா உயர்ந்த இடத்திற்குச் செல்லவேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.