India

நண்பனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த உயிர் நண்பன் செய்த செயல் : சிறையில் கொண்டு நிறுத்திய விபரீதம்!

ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்திற்கு செப்டம்பர் 3ம் தேதி தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. அதில், “நாளை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்க போகிறேன்” என மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.

இந்த மிரட்டலை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலிஸார் விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர். மேலும், தொலைபேசி எண்ணை டிராக் செய்ததில் சாய்ராம் என்பவரின் மின்னஞ்சல் மற்றும் செல்போன் எண் எனத் தெரியவந்தது.

பின்னர் மிரட்டல் வந்த அந்த செல்போன் நம்பரைக் கண்டுபிடித்து தொடர்ப்பு கொண்டபோது, சஷிகாந்த என்பவர் சிக்கினர். பின்னர் அவரை கைது செய்து போலிஸார் விசாரித்தபோது சஷிகாந்த் தான் மிரட்டல் விடுத்ததையும் கண்டுபிடித்தனர். மேலும் நடைபெற்ற விசாரணையில் சஷிகாந்த் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

அந்த விசாரணையில் சஷிகாந்த் கூறியதாவது, “நானும் சாய்ராமும் நண்பர்கள். கடந்த சில ஆண்டுகளாக நான் வேலையில்லாமல் இருந்துவந்தேன். என்னுடன்தான் சாய்ராமும் இருப்பான். ஆனால் சமீபத்தில் மேற்படிப்புக்காக கனடா செல்ல சாய்ராம் தயாரானான்.

அவனது வெளிநாட்டுப் பயணத்தைத் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனது பயணத்தை தடுக்க முயற்சி செய்தேன். அதன்படியே இப்போது அவன் செல்லவிருந்த நாளில் விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்தேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கனடா தூதரகத்திற்கு சாய்ராம் குறித்து அவதூறு தகவல்களையும் மின்னஞ்சல் மூலம் சஷிகாந்த் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததன் பேரில் சஷிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையில் உள்ள சஷிகாந்தை நேரில் சென்று பார்வையிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்கு போய்வருவதாக சாய்ராம் தெரிவித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.