India

தான் இறந்துவிட்டதாக விடுமுறைக் கடிதம் எழுதிய மாணவன் : படித்துப் பார்க்காமல் அனுமதி கொடுத்த தலைமை ஆசிரியர்

உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவர் ஒருவர், விநோதமான கோரிக்கையை முன்வைத்து விடுப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “இன்று காலை 10 மணியளவில் நான் இறந்துவிட்டதால் அரை நாள் விடுப்பு வேண்டும்” என அந்த மாணவன் எழுதியுள்ளான். தன்னுடைய பாட்டி இறந்துவிட்டார் என்று குறிப்பிடுவதற்குப் பதில் தவறுதலாக தான் இறந்துவிட்டதாக எழுதியுள்ளான்.

அந்த விடுப்புக் கடிதத்தை முழுவதுமாகப் படித்து பார்க்காமல் பள்ளியின் முதல்வரும் கையெழுத்திட்டு அனுமதி அளித்துள்ளார்.

கடந்த 20ம் தேதி எழுதிய இந்த 8ம் வகுப்பு மாணவனின் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவனின் இந்த கடிதம் பலரை நகைப்புக்குரியதாக ஏற்க வைத்தாலும், அதனை படித்துக்கூட பார்க்காமல் கண்மூடித்தனமாக ஒரு பள்ளியின் முதல்வர் அனுமதி அளித்திருப்பது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மேலும், மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தரக்கூடிய ஆசிரியரே இவ்வாறு இருந்தால் அம்மாநில பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்ற வகையில் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்துள்ளது.