India

“இந்த வாரக்கடைசி பாழாகிவிட்டது” : ஜிடிபி சரிவால் தொழிலதிபர் கவலை!

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. முந்தைய காலாண்டின் 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது. இது தொழிலதிபர்கள், பொருளாதார வல்லுநர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ஜிடிபி தொடர்பாக வெளிவந்த தகவல் இந்த வெள்ளிக்கிழமையையும், மொத்தமாக தனது வாரக்கடைசியையும் பாழாக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்னும் செய்யவேண்டிய வேலை நிறைய இருக்கிறது. ஆனாலும், நான் உறுதியான நம்பிக்கையோடு இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா.

பொருளாதார சரிவு இல்லை என பா.ஜ.க-வினரும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் முட்டுக்கொடுத்து வரும் நிலையில், பொருளாதார நிலை குறித்து வெளிவரும் தகவல்கள் மோடி அரசின் தோல்வியை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தொழிலதிபர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளது. மோடி அரசைப் போற்றி வந்த தொழிலதிபர்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கியிருப்பதே அரசின் தோல்விக்குச் சாட்சி.