India

மீனவர்களை அச்சுறுத்த புதிய சட்டத்திருத்தம்... மாநில அரசின் உரிமையைப் பறிக்க பா.ஜ.க அரசு திட்டம்!

ஆழ்கடல் மீன் பிடித்தல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், இதற்கான சட்ட முன்வடிவை மாநில அரசுகளுக்கு அனுப்பி கருத்துக் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் ஆழ்கடல் தொடர்பான மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிபோகும் அபாயம் ஏற்படும். மேலும், விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கான அனுமதி வழங்கும் அதிகாரமும் மத்திய அரசின் வசம் சென்றுவிடும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின்படி இதுவரை, ஆழ்கடலில் 12 நாட்டிக்கல் மைல் வரையிலான கடற்பரப்பில் மீன்பிடி உரிமை வழங்குதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாநில அரசு வசம் இருந்து வருகிறது.

இந்நிலையில், புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் ஆழ்கடலில் மீன்பிடிக்க, விசைப்படகுகளுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசின் வசம் கொண்டு வர பா.ஜ.க முயற்சித்து வருகிறது.

இதன் மூலம் எல்லைக் கட்டுப்பாடின்றி பெரு நிறுவனங்கள் மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுவிடும். மேலும், மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டால் காலங்காலமாகச் செய்து வரும் மீன்பிடித் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேரிடும் என மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.