India

பயங்கரவாத வழக்கில் பெயரை நீக்க 2 கோடி லஞ்சம் கேட்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் : இதற்காகத்தான் சட்டத் திருத்தமா ?

மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட சேர்ந்த ஹஃபீஸ் சயீத்தின், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்த விவகாரத்தில், தொழிலதிபர் ஒருவரின் பெயரை இடம்பெறாமல் செய்வதற்காக ரூபாய் 2 கோடி லஞ்சமாகக் கேட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத் நடத்தும் பயங்கரவாத அமைப்புக்கு பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாகப் பணம் கொண்டுவரப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில், ஹஃபீஸ் சயீத் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பெயர் வெளியிடப்படாத தொழிலதிபர் ஒருவரும் சிக்கினார்.

இந்த வழக்கில், தொழிலதிபரின் பெயர் இடம்பெறாமல் இருப்பதற்காக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரூபாய் 2 கோடி லஞ்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து, அந்தத் தொழிலதிபர் என்.ஐ.ஏ உயரதிகாரிகளிடம் இது குறித்துப் புகாரளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் டி.ஐ.ஜி லெவல் அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அந்த மூன்று அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் எஸ்.பி ரேங்கில் உள்ளவர் என்றும் இருவர் இளநிலை அதிகாரிகள் எனவும் கூறப்படுகிறது.

தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் சட்டத்திருத்தம் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் லஞ்சப் புகாரில் சிக்கியிருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.