India

மனிதர்களா இவர்கள்?: வெள்ளத்தால் பள்ளியில் தஞ்சமடைந்த பெண்ணை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய கொடுமை! (Video)

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர், தான் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் பள்ளியில் தனது 3 மாத குழந்தையுடன் தஞ்சமடைந்துள்ளார்.

அவரை அங்கிருந்து வெளியேறுமாறு பள்ளிக் கண்காணிப்பாளரின் கணவர் தரதரவென இழுத்து வெளியே தள்ளியுள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர், தான் துப்புரவுத் தொழிலாளராகப் பணியாற்றும் பர்வானி கன்யா ஆஷ்ரம் பள்ளியின் விடுதியில் தஞ்சமடைந்தார்.

இதையறிந்த அப்பள்ளியின் கண்காணிப்பாளர் சுமீலா சிங்கின் கணவர் ரங்லால் சிங், அவரை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியுள்ளார். அவர் வெளியேற மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த ரங்லால், அப்பெண்ணை தரதரவென இழுத்து வெளியே தள்ளியுள்ளார்.

3 மாத குழந்தையுடன் அடைக்கலம் புகுந்த அப்பெண்ணின் ஆடைகள் களையும் வகையில், மனிதாபிமானமற்ற முறையில் தரதரவென இழுத்து வெளியே தள்ளிய ரங்கால் சிங்குக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான புகாரையடுத்து ரங்லால் சிங் மீது போலிஸார் வழக்குப் பதிவுசெய்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.