India

தண்ணீர் பற்றாக்குறையால் 180 பெண் குழந்தைகளுக்கு கிராப் வெட்டிய தலைமையாசிரியர் - தெலங்கானாவில் பயங்கரம் !

தெலுங்கானா மாநிலத்தில் மெதக் நகரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு உள்ள மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு நடந்த ஒரு சம்பவம் மொத்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த பள்ளியில், படிக்கும் மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இங்கு கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.பள்ளியில் இருந்த ஆழ்குழாய் கிணறு வற்றிப் போனதால் 3 நாட்களுக்கு ஒருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு அதிக செலவு ஆகியது.

பல்வேறு வழிகளில் தண்ணீரை மிச்சம் பிடிக்க பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இதனையடுத்து பள்ளி மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் செலவழிப்பதாக அறிந்த தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி, மாணவிகளின் கூந்தல் நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாக முடிவுக்கு வந்தார்.

இதையடுத்து அங்கு தங்கி பயின்ற 180 மாணவிகளின் தலை முடியையும் வெட்டிவிட உத்தரவிட்டார். இதனால் அனைவருக்கும் ‘கிராப்’ கட்டிங் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் வந்தனர். அப்போது தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு நீளமான கூந்தல் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி மாணவிகளின் கூந்தலை தலைமையாசிரியர் வெட்டிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.