India

டீ குடிக்கச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் - ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி துரத்தி அடித்த இந்துத்வா கும்பல்

வட மாநிலங்களில் மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் இந்துத்வா கும்பல் ஜெய் ஸ்ரீராம் என கூறச்சொல்லி பல்வேறு வகையில் இஸ்லாமியர்களை தினந்தோறும் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருகிறது.

அதன் வரிசையில் குஜராத்தின் பன்ச்மஹால் மாவட்டத்தில் மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழன் அன்று இரவு 10 மணியளவில் சமீர், சல்மான், சோஹெல் ஆகிய 3 வாலிபர்களும் கோத்ரா நகரில் உள்ள பாபா என்ற பகுதியில் டீ குடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல், அவர்களை மடக்கி ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்லச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த வாலிபர்கள் உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி ஓட முயன்றனர். அந்த கும்பலும் அவர்களைத் துரத்தி தாக்கியது. இஸ்லாமிய இளைஞர்கள் மூவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஆட்கள் கூடியதால் அந்த கும்பல் அந்த இடத்தில் இருந்து தப்பியது.

இதனையடுத்து காயமுற்ற வாலிபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் போலீசாரிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ச

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மாவட்ட எஸ்.பி. லீனா பாட்டீல், "புகார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது அவ்வாறு தாக்குதல் நடைபெற்றதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இரு தரப்பினருக்கும் நடந்த பைக் ரேஸின் போது பிரச்னை உருவானதால் தாக்குதல் நடந்திருப்பதாகவும், ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடச் சொல்லி எந்த நிகழ்வும் நடக்கவில்லை எனவும் எஸ்.பி. மறுத்துள்ளார். எஸ்.பியின் இந்த பேச்சு இந்துத்வா கும்பல்களுக்கு காவல் துறை உடந்தையாக இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.