India

ஹெல்மெட் அணியாவிடில் பெட்ரோல் இல்லை - தாமாக முன் வந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் கட்டாயம் ஹெல்மெட் அணிவது தொடர்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளும், விழிப்புணர்வு பிரசாரங்களும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதால் விபத்து ஏற்படும் போது, அதிக உயிரிழப்புகள் நேரிடுவதால் கட்டாய ஹெல்மெட் நடவடிக்கையை அரசு கையில் எடுத்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் 12,200 பேர் மரணமடைந்துள்ளனர். அதில் ஹெல்மெட் அணியாதவர்கள் 73 சதவிகிதம் பேர் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், இரு சக்கர வாகனங்களுக்கு பதிவு செய்யும் போது தலைக்கவசம் வாங்கியதற்கான ரசீதும் அடையாள அட்டையுடன் இணைத்து வழங்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.

தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தும் வகையில், இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்றால், ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என, நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்க இயலாது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகத்தில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் நாளை (ஆகஸ்ட் 1) முதல் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளனர்.

அதேபோல், உத்தர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள பெட்ரோல் நிலைய நிர்வாகங்கள், தாமாக முன் வந்து இந்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.