India

நிலத்தகராறில் நியாயம் கேட்ட 9 பேர் சுட்டுக்கொலை... கிராமத் தலைவர் தப்பியோட்டம் : போலீஸ் வலைவீச்சு!

உத்தர பிரதேசத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக சபாஹி கிராமத் தலைவர் யக்யா தத்க்கும், மற்றொரு கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தகராறில் முடிந்துள்ளது.

பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அண்டை மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளது உ.பியின் சோன்பத்ரா பகுதி. அங்கு, ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கு சொந்தமான நிலம் ஒன்று இருந்துள்ளது. அதில், விவசாய பணியை நடத்த கிராம மக்கள் அனுமதிக்காமல் பல ஆண்டுகளாக தடுத்து வந்ததால் கிராமத் தலைவர் யக்யா தத்துக்கு அந்த இடத்தை விற்றுவிட்டார்.

இதனையடுத்து, யக்தா தத் துப்பாக்கி ஏந்திய தனது ஆட்களுடன் நிலத்திற்கு வந்த போது கிராம மக்கள் உள்ளே நுழைய அனுமதிக்காததால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, யக்யா தத்தின் ஆதரவாளர்கள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதால் மூன்று பெண்கள் உட்பட 9 கிராம மக்கள் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தை அடுத்து கிராமத் தலைவர் யக்யா தத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தப்பிச் சென்றனர். இதையறிந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.