India

மதத்தின் பேரில் நடக்கும் கொலைகளை தடுக்க புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 2வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவா கும்பல், பசுப் பாதுகாப்பு கும்பல், ஜெய் ஸ்ரீராம் கும்பல என அராஜக கும்பல்கள் நடத்தும் தாக்குதலை பா.ஜ.க அரசு ஊக்குவிக்கிறது என குற்றச்சாட்டப்படுகிறது.

பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைக் கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "மதத்தின் பேரில் கும்பல்கள் செய்யும் கொலை என்பது ஒரு கொடிய நோய் போல இந்தியா முழுவதும் பரவி வருகிறது. குறுகிய காலத்துக்குள்ளாகவே, இந்த கும்பல் கொலையால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மட்டுமின்றி போலீசார் உள்பட சமுதாயத்தின் அனைத்து பிரிவை சேர்ந்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசோ, இந்த விஷயத்தில் தொடர்ந்து பாராமுகம் காட்டி வருவது வேதனையளிப்பதாக உள்ளது. மத்திய மற்றும் சில மாநில அரசுகளின் இந்த அலட்சியப் போக்கு காரணமாக கும்பல் கொலைகள் பெருகி வருகின்றன.” என்று வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். அதே நேரம் இந்த கொலைகளில் ஈடுபடுவோருக்கு தண்டனையளிக்க உத்தரபிரதேச சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ள மசோதாவை வரவேற்றுள்ளார்.

அந்த பரிந்துரையில், கும்பல் கொலையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ”இந்த சட்ட மசோதாவை உத்தரபிரதேச அரசு உடனடியாக ஏற்றுக்கொண்டு அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கும்பல் கொலையை தடுக்க நாடு தழுவிய அளவிலான புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும்". என மயாவதி வலியுறுத்தியுள்ளார்.