India

80% துப்புரவு பணியாளர்கள் பணி ஓய்வுக்கு முன்பே மரணமடைகிறார்கள்: ஆய்வில் தகவல் - இதற்கு நாமும் ஓர் காரணம்

நாடு அபார வளர்ச்சி அடைந்து வருகிறது எனப் பெருமை பேசும் இந்த வேளையில், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்னும் தொடர்கிறது. மலக்குழியில் இறங்கினால் தான் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதால் விரும்பம் இல்லாத பல துப்புரவு பணியாளர்கள் இந்த வேலையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் கூட, 1993ம் ஆண்டு முதல் மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணியில் ஈடுபட்டதால் 801 துப்புரவு பணியாளர்கள் இறந்துள்ளதாக மனிதக் கழிவை அகற்றும் தொழிலாளர்களுக்கான தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணைய தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணைய சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஜுலை 12-ம் தேதி துப்புரவு பணியாளர்கள் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜகதீஷ் ஹிர்மானி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஜகதீஷ் ஹிர்மானி, “ துப்புரவு பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் மிக மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். முறையான சுகாதார வசதிகள் எதுவுமின்றி அவர்கள் வேலை செய்வதால் எளிதில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இதனால் 80 சதவீதம் பேர் ஓய்வுக்கு முன்னதாகவே இறந்து விடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன” என அதிர்ச்சி தகவலை அவர் தெரிவித்தார்.

மேலும், “ துப்புரவு பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும் மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வீடு இல்லாத துப்புரவு தொழிலாளர்களுக்கு, வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தர வேண்டும்.

அதன் படி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2,500 துப்புரவு தொழிலாளர்களில், 2000 பேருக்கு வீடுகள் இல்லை எனத் தெரிய வருகிறது. அவர்களுக்கு வீடு வழங்க தமிழக அரசு முன்வரவேண்டும்” என்றார். அதுமட்டுமின்றி, “மனிதர்கள் மூலமாகவே மனித கழிவுகளை அகற்றும் நிலையை மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

துப்புரவு பணியாளர்களுக்கு பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும். தொழிலாளர்கள் வன்கொடுமைக்கு ஆளானால், ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும். துப்புரவு தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.450 வழங்க வேண்டும்” என கூட்டத்தில் அறிவுறுத்தினார்.