India

ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக குரல் எழுப்புபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் - ராகுல் காந்தி சாடல்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது பீகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தாக்கல் செய்த அவதூறு வழக்கில் பாட்னா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பீகாரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், "எனக்கு ஒரு கேள்வி எழுகிறது. ஏன் திருடர்கள் அனைவரின் பெயருக்கு பின்னால் மோடி என்ற பெயர் இருக்கிறது. நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி இன்னும் எத்தனை மோடிகள் வருவார்களோ, யாருக்குத் தெரியும்" என்று பேசினார்.

இதனையடுத்து, பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பாட்னா தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி பாட்னா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

பீகார் துணை முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ''ஆர்.எஸ்.எஸ் மற்றும் நரேந்திர மோடியின் சித்தாந்தத்திற்கு எதிராக யார் குரல் எழுப்புகிறார்களோ அவர்கள் நீதிமன்றம், வழக்குகள் மூலம் தண்டிக்கப்படுகிறார்கள். எனது போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவது, ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக நிற்பது தான்'' இவ்வாறு தெரிவித்தார்.