India

பட்ஜெட் எதிரொலி : பெட்ரோல் டீசல், விலை உடனடியாக எவ்வளவு உயர்ந்திருக்கிறது தெரியுமா?

2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அப்போது, '''நாட்டின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது '' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பெட்ரோல் விலை ரூ.2.50, டீசல் விலை ரூ.2.30 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், உள்ளூர் வரியும் கூடுதலாக இணையும் என்பதால் நாட்டில் வெவ்வேறு இடங்களில் விலையில் மாறுபாடு இருக்கும். இந்த விலை உயர்வு இன்று (ஜூலை 5) நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது.பெட்ரோல் விலை பெருமளவு மக்களைப் பாடாய்ப்படுத்தி வரும் நிலையில், மேலும் அதிகரித்திருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல, இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி வரி 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதன் எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பிற்பகல் கிராமுக்கு 59 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.